Tuesday, 14 June 2016

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்


"அமெரிக்கா ஒரு கனவு". அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தனது உழைப்பை/சேவையை விற்க தயாராகும் பல்லாயிரக்கணக்கான படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில்நுட்ப அறிவற்ற சாதாரண உழைப்பாளிக்கும் உள்ள கனவு. போதுமென்ற மனதை கொண்டிருக்க சொல்லும் பழமொழியை தற்போது யாரும் நம்புவதில்லை. பேராசை, பேரவா, சுயநலம், இவ்வாறு எவையெல்லாம் தப்பென்று நீதி நூல்கள் சொல்கின்றனவோ, அவையெல்லாம் அமெரிக்க கனவின் அடிப்படை தகுதிகள்.

"அமெரிக்க சுதந்திரம்"சாமானியர்களும் தினசரி உச்சரிக்கும் மந்திரம். ஆனால் அவர்களது சுதந்திரம் கடனுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் அண்மையில் தான் அறிந்து கொண்டார்கள். சுதந்திரம் இருந்தது! முதலாளிகளும், பெரிய நிறுவனங்களும், நிர்வாகிகளும், எல்லையற்ற சுதந்திரம் அனுபவித்தனர். அதிகம் சம்பாதித்தால், வரி குறையும். தாராளமாக செலவு பண்ண சுதந்திரம். லாபம் என்ற பெயரில் பெருகும் பணத்திற்கு எல்லை வகுக்கப்படவில்லை. அந்தப்பணத்தையும் எப்படியும் சேர்க்கலாம். சட்டப்படி திருடுவதற்கு கணக்காளர் வழிசொல்வார். பங்குச் சந்தையில் சூதாட முகவர்கள் இருக்கிறார்கள். பொய், புரட்டு, மோசடி, இவையில்லாமல் வியாபாரம் நடக்காது. இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க முடியாது. அரசாங்கம் தலையிட முடியாது. ஏனெனில் அது சந்தையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். அமெரிக்கர்கள் "சுதந்திரம்" என்ற சொல்லை சரியான அர்த்தத்துடன் தான் பயன்படுத்துகின்றனர். ஆந்நியர்கள் தான் அது எதோ தனிமனித சுதந்திரம் சார்ந்த விடயம் என்று நம்பி ஏமாந்து விட்டார்கள்.

பொருளாதாரம் சாமானிய மக்களுக்கு எளிதில் புரியாத ஒன்று. இருப்பினும் அனைவரும் இன்று சந்தைப் பொருளாதார விதிகளுக்கு அமைய பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். சந்தை என்பது இயற்கைப் பொருளாதாரத்தில் ஒரு பகுதி மட்டும் தான். ஆனால் லிபரலிச, (இன்னும் தீவிரமான) நியோ லிபரலிச சித்தாந்தங்கள் தான் சந்தையை பொருளாதார சக்கரத்தின் அச்சாணி ஆக்கின. பங்குச் சந்தை தேசிய பொருளாதாரத்தை தலைமை தாங்கும் வண்ணம், அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டன. அன்று பூரண தனியார்மயமாக்கலை ஆதரித்தவர்கள், இன்று நெருக்கடி காலத்தில் அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்கின்றனர்.

இப்போது தான் அரசு என்ற ஸ்தாபனத்தின் சுயரூபம் வெளித்தெரிகின்றது. அதன் அடிப்படை நோக்கம், அதாவது பலமான முதலாளிகளிடமிருந்து, பலவீனமான மக்களை பாதுகாப்பது என்ற வாக்குறுதி, இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவவசதியின்றி பிணியால் வாடிக்கொண்டிருக்கையில், 30 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்காக ஒரு சதமும் செலவழிக்காத அரசு, வங்கிகள் திவாலாகாமல் பாதுகாக்க பில்லியன் டாலர்களை தயங்காமல் அள்ளிக்கொடுத்தது. ஐரோப்பிய அரசுகளும் மக்களின் வரிப்பணத்தை அள்ளிக்கொடுத்து சந்தைப் பொருளாதாரம் அழிய விடாமல் காப்பாற்றின. தமது உதாரணத்தை பிற நாட்டு அரசாங்கங்களும் பின்பற்ற வேண்டும் என்றனர்.

அனைவரது கவலையும் வெகுவாக குறைந்துள்ள பங்குகளின் பெறுமதியை உயர்த்தவேண்டும் என்பதே. ஒரு நிறுவனத்தின் ஐந்து சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை அரசாங்கம் வாங்க கூடாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் பாராளுமன்ற அனுமதி வேண்டும் என்று சில நாடுகளில் சட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் காத்திராமல், ஒரே இரவுக்குள் முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது அரசாங்கம் பங்குகளை வாங்கி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தை நன்றாக இயங்க வைத்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு கொண்டுவருவோம் என்று பகிரங்கமாகவே சொல்கின்றனர். சுருக்கமாக சொன்னால், முதலாளிகள், அவர்களது மூலதனம் காப்பாற்றப்பட வேண்டும்.

நிதி நெருக்கடியை இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாக பார்த்தனர். அது தவறு. முதலாளித்துவம்(அதிலும் குறிப்பாக வங்கித்துறை, சந்தை என்பன) அடி வாங்கியுள்ளது. அரசுகள் தலையிட்டு காப்பாற்றி விட்டன. அதே நேரம், இது தற்காலிக பின்னடைவு மட்டுமே, மீண்டும் எல்லாம் பழையபடி வந்து விடும் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர். அதுவும் தவறு. முதலாளித்துவ பொருளாதாரம் குறிப்பிட்ட காலம் வளருவதும், பின்னர் அளவுகடந்த உற்பத்தி காரணமாக நெருக்கடிக்குள் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து மீள்வதும் அடிக்கடி நடப்பது தான். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி, இமாலய பலத்துடன் இருந்த வங்கிகளை பாதித்திருப்பதால், அதன் விளைவு பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

இந்த நெருக்கடியால் அமெரிக்கா வல்லரசு தகரும் என்ற எண்ணமும் தவறானது. ஜெர்மனியின் அதிகம் விற்பனையாகும் வலதுசாரி சஞ்சிகையான "டெர் ஸ்பீகல்" கூட அப்படி ஒரு கருத்தை முன்வைத்தது. உலகப் பொருளாதரத்தில் அமெரிக்காவின் ஆலோசனைகளை, மாதிரிகளை, கொள்கைகளை இனிமேல் யாரும் பின்பற்றபோவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்கா தான் தற்போதும் உலகில் மிகப்பெரிய இராணுவ வல்லரசு என்ற நிலையில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில், அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு, ரஷ்யா அல்லது சீனா அமெரிக்காவை விட இராணுவ வளர்ச்சி கண்டால் ஒரு வேளை நிலைமை மாறலாம். அமெரிக்கா தனது பாதுகாப்பு படைகளுக்கு, அதிக பட்ஜெட் ஒதுக்கி வருகின்றது. பல நிறுவனங்கள் இராணுவத்துக்கு தேவையான ஆயுத தளபாடங்களையும், பிற கருவிகளையும் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வாங்குவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. மேலும் சினிமா, இசை, போன்ற கலாச்சார ஏற்றுமதியிலும் அமெரிக்கா முன்னணி வகிக்கின்றது. சமீபத்திய நிதி நெருக்கடியானது, இத்தகைய நிறுவனங்களில் இதுவரை முதலிட்ட வங்கிகளை ஓரங்கட்டி விட்டு, அரசே எடுத்து நடத்தும் நிலையை உருவாக்கலாம். அப்படியானால் அது ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை கூட உருவாக்கலாம்.

முதலாளித்தை ஆதரிப்பவர்களுக்கு நிரந்தர கொள்கை எதுவும் இல்லை. லிபரலிசம், நியோ லிபரிலிசம், Laissez Faire முதலாளித்துவம், சமூக ஜனநாயகம், அல்லது பாசிசம் இவ்வாறு எதை அடிப்படையாக வைத்தாவது முதலாளித்துவத்தை, அல்லது அதனால் பலனடையும் தமது இருப்பை காப்பாற்றவே விரும்புவர். 1930 ம ஆண்டு ஏற்பட்ட மோசமான நிதி நெருக்கடியில் இருந்து அமெரிக்கா மீண்டு விட்டது தானே, என்று முதலாளித்துவத்திற்காக வாதாடுபவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கலாம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்கா, ஜெர்மனிக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடனை உடனே திருப்பி செலுத்துமாறு கோரியதும், அதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாசிசத்தின் எழுச்சிக்கும், ஹிட்லர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்ததும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட வல்லரசுப் போரில்(2 வது உலகயுத்தம்) அமெரிக்காவும் குதித்து ஆயுதங்கள் விற்று தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டதும் வரலாறு. சரித்திரம் மீண்டும் திரும்பாது என்பது நிச்சயமில்லை.

நிதி நெருக்கடியின் விளைவுகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் "பொருளாதார தேக்கம்" என்ற பின்னடைவை ஏற்படுத்தப் போவது மட்டும் உறுதி. அதன்படி இயற்கையான பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் செலவைக் குறைத்தல் என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகமான தொழிலாளரை வேலையை விட்டு நீக்குதல், ஒரு பக்கத்தில் உதவிப் பணத்தில் அல்லது வறுமையில் வாழும் மக்களை உருவாக்கும். மக்கள் தமது பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீட்டிலே சேமிக்க தொடங்குவர். நமது நாட்டு மக்களுக்கு (அமெரிக்க-ஐரோப்பிய) "சீரழிவு கலாச்சாரம்" பற்றிய புரிதல் மிகக் குறைவு. உண்மையில் இந்த "சீரழிவு கலாச்சாரம்" தான் இந்த நாடுகளை பணக்கார நாடுகளாக தொடர்ந்து வைத்திருந்த ஊக்கியாகும். அதாவது மக்கள் பணத்தை தாராளமாக செலவழிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளோடு நிறுத்திக் கொள்ளாது ஆடம்பர தேவைகளுக்கும் செலவழிக்க வேண்டும். அப்போது தான் புதிய புதிய (ஆடம்பர பண்டங்கள் உற்பத்தி செய்யும்) நிறுவனங்கள் உருவாவதுடன், அதனால் தேசிய பொருளாதாரமும் வளர்ச்சியடையும். சாமானியருக்கும் புரியும்படி சொன்னால், "குடி" மக்கள் அதிகளவில் மதுபான சாலைகளை நாடினால், அந்த துறை வளர்ச்சியடைவதுடன், அரசாங்கத்திற்கும் நிறைய வரி கிடைக்கும். "பணம் ஓடித்திரிய வேண்டும்" என்பது சந்தையின் பொன்மொழி. இதற்கு மாறாக இலங்கையிலும், இந்தியாவிலும் வாழும் ஓரளவேனும் வசதிபடைத்த மக்கள், பணத்தை தங்க நகைகளாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதால், ஏற்கனவே அங்கே பொருளாதார தேக்கம் நிலவுகின்றது.

உலகமயமாக்கல் அமெரிக்க பாணி கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதற்கு இந்தியா போன்ற "பழமை, பாரம்பரியம்" மிக்க நாடு கூட தப்பவில்லை. காரணம், தனி இனம் போல காட்சியளிக்கும்,அந்நாட்டின் ஆளும் வர்க்கம். அன்று தமது பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்களாக இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்து பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டினார்கள். அண்மைக்காலத்தில் கணிப்பொறி வல்லுனர்களை அனுப்பி அந்த தேவையை நிறைவேற்றிக் கொண்டனர். இவ்வாறு ஒருபக்கம் "தங்கப்பசி" கொண்ட இந்தியர்கள் உலகிலேயே அதிகளவு தங்கத்தை நுகர்வோராக இருப்பதாலும், மறுபக்கம் NRI என்றழைக்கப்படும் வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் டாலர்கள் அரச கஜானாவை நிறைப்பதாலும், உலக பொருளாதாரம் இந்தியாவை நெருக்கமாக கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலைமை, 90 களுக்கு பின்னர் ஏற்பட்ட சந்தைப் பொருளாதார சீர்திருத்தால் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்து நேருவின் சோஷலிசம் இருந்த காலத்தில் கூட எதோ ஒருவகையில் நிதி நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும். விரிவாக சொன்னால், தங்கமும், டாலரும் உலக வர்த்தகத்திற்கு இன்றியமையாதவை. இவ்விரண்டும் கையிருப்பில் குறைந்தால், அல்லது உலக சந்தையில் பெறுமதி குறைந்தால் அந்த நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கும்.

உலகின் அரைவாசி நாடுகளை தனது காலனிகளாக வைத்திருந்த இங்கிலாந்து தான் தங்கத்தை உலக வர்த்தகத்திற்கான பொது நாணயமாக கொண்டு வந்தது. (இங்கிலாந்து நாணயமான பவுன் என்ற பெயர் அதன் காரணமாக வந்தது தான்) அதன் காரணமாக எல்லா நாட்டு நாணயமும் தங்கத்துடன் ஒப்பிட்டு பெறுமதி பார்க்கப்பட்டது. 2 ம் உலகயுத்தத்தின் பிறகு அமெரிக்கா உலக ஏகபோக வல்லரசாகியதால், டாலரை சர்வதேச வர்த்தகத்திற்கான பொது நாணயமாக்கியத்துடன், டாலரின் பெறுமதியை தங்கத்துடன் ஒப்பிடுவதில் இருந்து கழற்றி விட்டது. இதனால் அனைத்து உலக நாடுகளும், (சீனா உட்பட) தமது திறைசேரியில் டாலர்களை நிரப்பி வைத்துள்ளன. அனேகமாக அமெரிக்கா தேசத்தில் பாவனையில் உள்ள டாலர் அளவேனும், வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளதால், அதேயளவு டாலர் தாள்களை அச்சடித்து உள்நாட்டில் புழக்கத்திற்கு விட்டுள்ளது.

தற்போது எழுந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக உலக நாடுகள் தமது டாலர்களை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதனது கேள்வி குறைந்து, பெருமளவு டாலர்கள் அமெரிக்காவுக்கே திரும்புமாயின், அமெரிக்காவில் இன்னொரு நிதி நெருக்கடியும், பொருளாதார வீழ்ச்சியும் உருவாகும்.ஏற்கனவே எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் மத்தியில் ஈரானும், வெனிசுவேலாவும் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக யூரோவை கொண்டு வரவிருந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கம் தான் அப்படி ஒரு முயற்சியை தடுத்த சக்தி. அமெரிக்காவின் செல்வத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 2 ம் உலகயுத்ததிற்கு பின்னர், அழிவில் இருந்து ஐரோப்பாவை மீட்டு பணக்கார நாடுகளாக மாற்றிய அமெரிக்கா, அதற்கு பிரதிபலனாக அமெரிக்காவில் முதலீடு செய்ய தூண்டியது. அதே போன்றே எண்ணை ஏற்றுமதியால் பெரும்பணம் ஈட்டிய வளைகுடா ஷேக்குகளும், தமது லாபத்தில் பெரும்பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இதனாலேயே அந்த நாடுகளும் அமெரிக்க நிதி நெருக்கடிக்குள் சிக்கி பாதிக்கப்பட்டன.

இன்றைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அண்மைக்காலமாக பொருளாதார வளர்ச்சி கண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளை வந்து முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கேட்டு வருகின்றது. இந்தியா அதனை செய்யும் சாத்தியம் உண்டு. அணுசக்தி உடன்படிக்கை மூலம் அமெரிக்கா, இந்தியாவை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனா தயக்கம் காட்டுகின்றது. அது தனது பொருளாதார பழுதுகளை திருத்திக் கொள்வதிலும், உள்நாட்டில் முதலீடு செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறது. அப்படியே அமெரிக்காவில் முதலீடு செய்ய முன்வந்தாலும், நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை வாங்க விரும்பலாம். அதனை (நாட்டை விற்பதற்கு சமம் என்பதால்) அமெரிக்கா விரும்பப் போவதில்லை. மேலும் இனிமேல் (சீனாவின் ஒரு பகுதியான) ஹோங்ஹோங் தான் இனிமேல் (நியூ யார்க் போல) சர்வதேச வர்த்தக மையமாக வரப்போவதாக வதந்திகள் அடிபடுகின்றன.

இன்று காணும் மாற்றங்கள் யாவும் சீனா உலக வல்லரசாக மேலாண்மை பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளதை கோடிட்டுக்காட்டுகின்றன. அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான எதிர்கால அச்சுறுத்தலுமாகும். இந்த ஒப்பந்தமானது, இந்தியா முற்றுமுழுதாக அமெரிக்க முகாமுக்குள் போய்விட்டதை காட்டுகின்றது. அதே நேரம், சீனா இலங்கையில் காலூன்றி வருகின்றது. இவ்வளவு காலமும், இலங்கைக்கு அதிக நிதியுதவி வழங்கி வந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டது சீனா. இலங்கையின் தென்பகுதியில், எதிர்காலத்தில் வரப்போகும்(அல்லது அப்படி ஊகிக்கப்படும்) சீன கடற்படை முகாமானது, இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கான ஏற்பாடு ஆகும். இலங்கை சீனாவின் ஆதிக்கத்திற்கும் முழுவதுமாக போக முன்னர், இந்தியா தனது முதலீடுகளை பெருக்குவதன் மூலம் தடுக்கப்பார்க்கின்றது. அமெரிக்கா இராணுவ உதவி செய்வதன் மூலம், ஈரானின் தலையீட்டை தடுக்கப்பார்க்கின்றது. இன்றைய நிதி நெருக்கடி இந்த வல்லரசுப் போட்டியை தீவிரமாக்கலாம், அல்லது விரைவு படுத்தலாம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய முதலீடுகள் மிகக் குறைவு. ஐரோப்பாவில் இருந்து வரும் நிதியில் பெருமளவு பகுதி, "NGO பொருளாதாரத்திற்கே" செலவிடப்படுகின்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற திட்டங்களை ஐரோப்பிய பணத்தில் நடைமுறைப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள் இனிமேல் இயங்க முடியாத நிலை வரலாம். அதற்கு காரணம், நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள தமது வங்கிகளை காப்பாற்ற பெரும்பணம் செலவிடும் ஐரோப்பிய அரசுகள், அபிவிருந்தியடையும் நாடுகளுக்கு இதுவரை வழங்கி வந்த நிதியை குறைக்கவிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, சர்வதேச சந்தையில் ஏறிய உணவுப்பொருட்களின் விலை இறங்கவில்லை. உள்நாட்டில் கூட உணவுப்பொருட்களை வாங்குவதும் விற்பதும் (லாபத்தை மட்டுமே முக்கியமாக கருதும் வியாபாரிகளின்) கையில் இருப்பதால், மக்கள் பட்டினியால் செத்தாலும் விலை குறையப் போவதில்லை. இது போன்ற காரணங்களால் இலங்கையிலும், இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள், வறுமைக்குள்ளும், இன்னும் மோசமாக பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுவர். இவற்றைப் பற்றி உலக அக்கறை மிக மிக குறைவாக இருக்கும். இந்த நெருக்கடியான காலத்தில், பணமிருப்பவர்கள் தமது நலன்களை மட்டுமே பார்க்கப்போகின்றனர். இதைப்பற்றி கேட்கபோனால், "தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்" என்று தத்துவ முத்துகள் உதிரப்போகின்றன. உலக உணவுத்திட்டமும், ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து ஏற்கனவே எச்சரித்து விட்டன.
_________________________________________________
-இந்தக் கட்டுரை நோர்வேயில் இருந்து வெளிவரும் "பறை" இதழில்(ஒக்டோபர் 2008) பிரசுரமாகியது. http://www.frimedianorway.com
____________________________________________________________

ஒரு பெண் போராளியின் கதை

ஒரு பெண் போராளியின் கதை

Guerrillera (பெண் போராளி) ஆவணப் படம். 
கொலம்பியா நாட்டின் புரட்சி இராணுவமான FARC இல் இணைந்த ஒரு பெண் போராளியின் கதை, படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள், அந்த இயக்கத்தின் இராணுவப்பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் போராளிகளின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றை இந்த படத்தில் பார்க்கலாம். ஸ்பானிய மொழி பேசும் படம் ஆங்கில உப தலைப்புகளுடன்.
Guerrillera



The translation of the introduction
___________________________________
Two hundred years ago
Simon Bolivar lead an uprising of
indians and african slaves
against the Spaniard empire in Southamerica.

Bolivar defeated spaniard army
but his social and revolutionary dream
was beatrayed for Colombian landowners.

Today,
a guerrilla called FARC-EP
keep fighting in Bolivar ideals
against Colombian oligarchy

FARC controls a big part of Colombia
and the foreign investor consider it as
a dangerous threat.

For Colombian and U. S. Goverments
guerrilas are kidnappers, drug-traders
and Terrorist

no other confict in western hemisphere
has the same bloody and suffering consequenses

Military and paramilitary death squadas
mutilate, kill and jail civilians suspected
of shimpaties with rebelds.

In hidden jungle training camps
FARC teachs to new recruits Simon Bolivar,
Carl Marx and Valdimir Lenin ideals, and
prepare them to fight.

when anyone decides fight
his/her compromise is for life time.

_______________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...

டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்...



டாலரின் மதிப்பு திடீரென ஒரே நாளில் குறைந்து, உலகம் முழுவதும் டாலரை நிராகரித்தால் என்ன நடக்கும்? நிதி நெருக்கடி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகையில், எந்த நேரம் எதுவும் நடக்கலாம் என்பதால், அதன் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக, நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் VPRO, பொருளாதார செய்திகளை தாங்கி வரும் NRC Handelsblad உடன் இணைந்து, "டாலர் வீழ்ச்சியடைந்த அந்த நாள்..." என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. பொருளாதாரத் துறை சார்ந்த நிபுணர்களை பேட்டி கண்டு, அவர்களது எதிர்காலம் பற்றிய ஊகங்களின் அடிப்படையில், கற்பனை கலந்து, பொது மக்களுக்கு புரியக்கூடிய விதத்தில் இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.
டாலர் மதிப்பு திடீரென சரிவதற்கு சாத்தியமான ஒரு நிகழ்வு, பெருமளவு டாலர்களை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசியநாடுகள், அதன் மதிப்பு மேலும் குறைவதற்கு முன்னர் சந்தையில் விற்று, தமது முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள முனைவதேயாகும். அதிகாலையில் உலக சந்தை முதலாவதாக வியாபாரத்தை ஆரம்பிக்கும் ஜப்பான், சீனா போன்ற ஆசிய நாடுகளில் சில வணிகர்கள் பெருமளவு டாலர்களை விற்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அப்போதே டாலரின் வீழ்ச்சி ஆரம்பமாகும். சிறிது நேரம் கழித்து சிங்கப்பூர் பங்குச் சந்தையிலும் அப்படி எல்லோரும் தம்மிடம் இருக்கும் டாலரை எப்படியாவது விற்றுவிட துடித்தால், அந்த சர்வதேச நாணயத்தின் பெறுமதி கணிசமாக குறையும். இது பற்றிய செய்திகள் ஐரோப்பாவில் பரவும் போது, ஏற்கனவே "டாலர் நெருக்கடி" உருவாகி விட்டிருக்கும்.
ஆரம்பத்தில் சாதாரண மக்கள் எதனையும் உணராவிட்டாலும், டாலர் மதிப்பு இறங்குவது பற்றிய செய்தி பீதியைக் கிளப்பும் வேளை, எல்லோரும் தமது கையிருப்பில் உள்ள டாலர்களை விற்றுவிட முனைவார்கள். நாணய மாற்று நிலையங்களில், அல்லது வங்கிகளில் குறிப்பிட்ட அளவு டாலர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமென அறிப்பார்கள். கட்டுப்படுத்தப்பட முடியாவிட்டால் டாலர் வாங்குவதை நிறுத்தி விடுவார்கள். வங்கிகளின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில், எல்லோரும் தமது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துவிட முண்டியடிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில், வங்கிகள் தானியங்கி இயந்திரங்களை நிறுத்தி விடுவார்கள். மக்கள் தமது கையில் இருக்கும் பணத்தை சிக்கனமாக செலவிட வேண்டி வரும்.
அமெரிக்காவில் பங்குச் சந்தை தரகர்களும், வணிகர்களும் எதுவுமே நடக்காதது போல பாவனை செய்வார்கள். இதற்கு முன்னரும் பொருளாதார நெருக்கடி வந்ததாகவும், அதிலிருந்து அமெரிக்கா மீண்டு விட்டதாகவும் சமாதானம் கூறிக்கொள்வர். ஆனால் அங்கேயும் டாலர் பெறுமதி மேலும் குறைவதை தவிர்க்க முடியாது. இதுவரை நட்பு பாராட்டி வரும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு தடைவிதிப்பர். எரிச்சலடையும் அமெரிக்க ஜனாதிபதி பிற நாடுகளுடனான இருதரப்பு வர்த்தகத்தை இரத்து செய்வார். 
அமெரிக்கா உலகில் இருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளும். நிச்சயமாக வர்த்தக உறவு முறிவடைவதை சீனா விரும்பப்போவதில்லை. தற்போது மேலாண்மை வல்லரசாகிவிடும் சீனா, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும். அமெரிக்கா பொருளாதார நெருக்கடியை இராணுவப் பலம் கொண்டு தீர்க்கும் முகமாக, சீனாவை அண்டிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகளை மேற்கொள்ளும். இத்துடன் இந்த பொருளாதாரத் திகில் படம் முடிவுறுகின்றது.
டாலர் வீழ்ச்சியடையும் ஊழிக்கால சம்பவங்கள் நிகழ்வதற்கு அடிப்படையான பொருளாதார அடிப்படை தரவுகள் என்ன? உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செய்யும் அமெரிக்காவின் செல்வாக்கு, மற்றும் டாலர் இன்றியமையாத அந்நிய செலாவணியாக மாறிவிட்டதன் விளைவுகளே அவை. இன்றைய நிலையில், அனைத்து நாடுகளும் டாலரை தமது சேமிப்பில் வைத்திருக்க வேண்டியுள்ளது. 
உலக சந்தையில் குண்டூசி முதல் ஆகாயவிமானம் வரை வாங்குவதற்கு டாலர் தேவைப்படுகின்றது. மேலும் பெற்றோலின் விலை டாலரில் மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, சீனா உட்பட பல நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து தமது கஜானவை டாலரால் நிரப்பிக் கொள்கின்றன. இதற்காகவே தமது சொந்த நாணயத்தின் பெறுமதியை குறைத்துக் கொள்கின்றன. ஐரோப்பா கூட தமது ஐரோ நாணயம் டாலரை விட மதிப்பு கூடுவதை விரும்பவில்லை. இது ஏற்றுமதி வர்த்தகத்தை பாதிக்கும் என அஞ்சுகின்றன.
நிலைமையை விளக்குவதற்கான உவமானக் கதை ஒன்று. ஒரு தீவில் ஐந்து பேர் மட்டும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒன்று அமெரிக்கா, மற்றயவர்கள் ஆசிய நாடுகள். மீன் பிடித்தல், உணவுப்பயிர் விளைவித்தல், கால்நடை வளர்ப்பு என ஒவ்வொருவர் தமக்குத் தெரிந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கா மட்டும் இவர்கள் உற்பத்தி செய்யும் உணவை வாங்கி உண்பதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ளது. எஞ்சும் உணவே மற்றவர்களுக்கு கிடைக்கின்றது. 
இத்தகைய சூழலில் அமெரிக்கா இருப்பதாலேயே தமக்கு உணவு கிடைப்பதாக கருதிக்கொள்கின்றனர். இன்றைய உலகமும் அப்படிதான் இயங்குகின்றது. உலகில் உற்பத்தி செய்யப்படும் பெருமளவு பொருட்களை அதிகம் நுகர்வோனாக அமெரிக்கா உள்ளது. உதாரணத்திற்கு உலகில் ஐம்பது வீதமான பெற்றோலை அமெரிக்காவே வாங்குகின்றது. எஞ்சிய ஐம்பது வீதத்தை மிகுதி நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.
அமெரிக்கா இவ்வாறு உலகம் முழுவதும் வாங்கிக் குவித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு கடனும் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அதாவது ஊர் முழுக்க கடன் வாங்கி, அந்தப் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளிடமும், நிறுவனங்களிடமும் கடன் வாங்கி தான், தனது பட்ஜெட்டை சரிக்கட்டுகின்றது. 
சீனா உட்பட பிற நாடுகள், அமெரிக்க கடன் பத்திரங்களை (இவை பங்குகள் போல சந்தையில் ஏலம் விடப்பட்டாலும், கடனை திருப்பிக் கொடுக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது) பெருமளவில் வாங்கி வைத்துக் கொண்டுள்ளன. இதனால் அமெரிக்காவின் கடன் அந்நாடுகளின் இருப்பில் இருக்கும் வேளை, டாலரின் மதிப்பு இறங்குவதோ, அமெரிக்க பொருளாதாரம் வீழ்வதையோ, அல்லது இருபக்க வர்த்தகம் தடைப்படுவதையோ யாரும் விரும்பப்போவதில்லை. இருப்பினும் அமெரிக்க பொருளாதாரம் மீதோ, அல்லது டாலர் மீதோ நம்பிக்கை இல்லாமல் போகும் போது தான் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உருவாகும்.

தற்போதைய நிதி நெருக்கடியால், பங்குச் சந்தை குறியீட்டு சுட்டெண் தொடர்ந்து குறைந்து வருகையில், அமெரிக்காவில் பொருளாதார தேக்கம் உருவாகும். அது அந்நாட்டு பொருளாதாரம் வளரவில்லை என்பதன் அறிகுறி. அதன் விளைவுகளாக, அமெரிக்கா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொள்ளும். இது ஒருவகையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, சேமிப்பு போன்ற சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். அதே நேரம் அமெரிக்காவின் உலக பொருளாதார ஆதிக்கத்தில் இருந்து விடுபடும் பிற நாடுகளும் எதிர்பாராத வளர்ச்சியை காணலாம். 
குறிப்பாக இதுவரை காலமும் டாலரின் மதிப்பு கூடியிருந்தால் தமக்கு நன்மை(ஏற்றுமதி வர்த்தகம்) என்று நினைத்துக் கொண்டு, பல நாடுகள் உள்நாட்டு நாணய பெறுமதியை செயற்கையாக குறைத்து வைத்திருந்த நிலை மாறும். இதனால் நமது நாட்டு நாணயங்களுக்கு என்றுமில்லாதவாறு மதிப்பு அதிகரிக்கும். அவற்றின் பெறுமதி கூடுவதால், மக்களின் வாங்குதிறன் அதிகரிக்கலாம். டாலரின் வீழ்ச்சி கொடுக்கும் அதிர்வலைகள், குறிப்பிட்ட காலத்திற்கு உடனடி கலவரங்களை உருவாக்கினாலும், நீண்ட கால நோக்கில் அது பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
"டாலர் வீழ்ச்சியடையும் அந்த நாள்" Video வை இங்கே பார்வையிடலாம் :

லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு

லாபம் முதலாளிகளுக்கு, நட்டம் மக்களுக்கு



"நவீன கால அரசு, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்குமான பொதுவிவகாரங்களை நிர்வகிக்கும் குழுவே அன்றி வேறில்லை." - மார்க்ஸ், எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை)
முதலாளித்துவம் அழியவில்லை. கடைசியில் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள், பொதுமக்களின் வரிப்பணத்தை கொட்டி, அழிவில் இருந்த வங்கிகளை ஒருவாறு காப்பாற்றிவிட்டனர். தானே ஏற்படுத்திய நிதிநெருக்கடிக்குள் சிக்கிக் கொண்ட முதலாளித்துவம், அரசாங்கத்தால் அழிவில் இருந்து மீட்கப்பட்டுவிட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் ஜனநாயக அரசுகள் மக்களை மீளாத்துயருக்குள் தள்ளிவிட்டன. சுருங்கக் கூறின்: ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தால் அதனை முதலாளிகள் தமது தனிச்சொத்து என்று உரிமை கொண்டாடும் அதேநேரம், அந்த நிறுவனம் நட்டமடைந்தால் அதனை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்பார்கள்.

அமெரிக்க அரசு வழங்கிய 700 பில்லியன் டாலர் மீட்புநிதி, முதன்மைப் பங்குதாரரின் ஆதாயப்பங்கு(டிவிடென்ட்) பட்டுவாடா செய்யவும், நிர்வாகிகளின் சம்பளங்களை (குறைந்தது US $ 30,000), போனஸ்களை (லட்சக்கணக்கில்) கொடுப்பதற்கும் செலவிடப்படாது என்பது என்ன நிச்சயம்? அரசுக்கு அதைப்பற்றி எந்த கவலையுமில்லை. அதே நேரம் இந்த மீட்புநிதியை வீட்டுக்கடன் கட்ட முடியாத பொது மக்களுக்கு வழங்கி, அவர்கள் வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். அமெரிக்க அரசு எப்போது தனது மக்களைப்பற்றி கவலைப்பட்டது? மீட்புநிதி பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தது என்பதால், வருங்காலத்தில் பொதுநல செலவினங்கள் குறைக்கப்படும். இதனால் அநேகமான பொது மக்கள், வறிய நாடுகளில் உள்ளது போல தப்பிப்பிழைக்கும் வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதே 700 பில்லியன் டாலரை கொட்டியிருந்தால், பரிதாபகரமான பொதுநல மருத்துவ துறையை சிறப்பாக நடத்தியிருக்கலாம். இதற்கிடையே இந்த தொகை, அமெரிக்க அரசு பாதுகாப்புக்கு (ஆப்கன், ஈராக் போர்கள்) செலவழிப்பதை விட குறைவு, என்று பெருமை வேறு.

"Laissez Faire"(பிரெஞ்சு மொழியில் : செய்ய விடு)முதலாளித்துவம் இது, என்று சொல்லி அரச தலையீடற்ற பொருளாதாரம் நடத்திய, அகங்காரம் கொண்ட தாராளவாத சந்தை விற்பன்னர்கள் தற்போது, "தவறு செய்து விட்டு தந்தைக்கு பின்னால் ஒளிக்கும் குழந்தைகளைப் போல" நடந்து கொள்கிறார்கள். இதே நிதி நெருக்கடி மூன்றாம் உலக நாடொன்றில் ஏற்பட்டிருந்தால், அந்நாட்டு அரசு இது போன்று மீட்புநிதி வழங்கி நிறுவனத்தை அழிவில் இருந்து காப்பாற்றக் கூடாது என்று, அமெரிக்க அரசு மட்டுல்ல, உலகவங்கி, ஐ.எம்.எஃப்., எல்லாமே ஆலோசனை வழங்கியிருப்பார்கள். அதற்கு உடன்படா விட்டால், கடனுதவிகளை நிறுத்தி விடுவார்கள். ஆனால் அந்த உபதேசமெல்லாம் உலகிற்கு மட்டுமே, அமெரிக்காவுக்கு இல்லை.

நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை சீனா வாங்க வேண்டும் என்று, சில சீன பொருளியல் நிபுணர்களும், மற்றும் சர்வதேச பெருமுதலாளிகளும் கேட்டுள்ளனர். ஆனால் சீன அரசு தயங்குகின்றது. ஏனெனில் லாபம் வரக்கூடிய நிறுவனங்களிலேயே யாரும் முதலீடு செய்ய விரும்புவர். அதன் அர்த்தம், அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது சீனா உட்பட பலரும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். ஐரோப்பாவும் தனி வழியில் செல்ல விரும்புகின்றது. அனேகமாக அதிக தொழிற்துறை வளர்ச்சி கண்ட ஜெர்மனி, ஐரோப்பிய பொருளாதாரத்தை தலைமை தாங்கலாம்.

கடன் நெருக்கடிக்குள் சிக்கி திவாலான ஐரோப்பிய வங்கிகள் சில அவை பிரதிநிதித்துவப் படுத்திய நாடுகளை விட அதிக பணபலம் கொண்டிருந்தமை அவற்றின் வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகின்றது. உதாரணத்திற்கு, மூன்று லட்சம் பேர் சனத்தொகையை கொண்ட சிறிய ஐஸ்லாந்து நாட்டு வங்கிகள், அகலக்கால் வைத்ததன் விளைவாக இன்று அழிவின் விளிம்பில் நிற்கின்றன. அது ஐஸ்லாந்து என்ற ஒரு தேசமே திவாலாகும் நிலைக்கு இட்டுச்சென்றது. வடதுருவ தீவுநாடான ஐஸ்லாந்து பொருளாதாரம், ஒரு காலத்தில் மீன்பிடித் துறையை மட்டுமே நம்பி இருந்தது. கடந்த தசாப்தங்களாக ஏற்பட்ட வங்கித் துறையின் பகாசுர வளர்ச்சி ஐஸ்லாந்தை செல்வந்த நாடாக்கியது. இதனால் நாட்டின் பொருளாதாரத்தையே தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வங்கிகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாங்கிக் குவித்தன, பெருமளவில் முதலீடு செய்தன. இறுதியில் அமெரிக்க கடன் பிரச்சனைக்குள் அகப்பட்டு, அனைத்தையும் இழந்து நிற்கின்றன. பேராசை பெருநஷ்டம் என்றொரு பழமொழி உண்டு.

ஐஸ்லாந்து அரசு, வங்கிகளை தேசியமயப்படுத்த தேவையான பணமின்றி தவித்தது. அதற்காக "தனது நண்பர்களிடம்" உதவி கேட்டும் கிடைக்காத நிலையில், தற்போது ரஷ்யா நான்கு பில்லியன் யூரோ கடன் வழங்க சம்மதித்துள்ளது. சர்வதேச நிதிநெருக்கடிக்குள் ரஷ்ய பங்குச்சந்தையும் மாட்டிக் கொண்டு நஷ்டமடைந்துள்ளது. இருப்பினும் அங்கே வலிமையான அரசாங்கம் இருப்பதால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது நாணயமான ரூபிளை சர்வதேச பரிவர்த்தனைக்கு விரிவுபடுத்தப் பார்க்கின்றது. அதனோடு நெருங்கிய உறவைப் பேணும் பெலாரஸ், வாங்கும் எண்ணைக்கு ரூபிளில் பணம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது. இது பின்னர் பிற நாடுகளுடனும் விரிவுபடுத்தப்படலாம்.

நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு சிறந்த வழி உண்டு. லாபவெறி பிடித்தலையும் வங்கிகள் எமக்கு தேவையில்லை. சேமிப்பு வங்கி, கூட்டுறவு வங்கி, விவசாய வங்கி, தபால் வங்கி போன்றன, அவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசத்தின் பொருளாதாரத்துடனும், மக்களுடனும் ஒன்றிணைந்து இருந்தன. அவை மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றிருப்பதால், நிதிநெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் அபாயம் குறைவு. முன்பெல்லாம் அமெரிக்காவிலும், மேற்கு-ஐரோப்பாவிலும் அப்படியான வங்கிகள் இருந்தன. அனால் Laissez Faire முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, பெருமளவு நிதி கொண்ட வர்த்தக-முதலீட்டு வங்கிகள், அவற்றை பிடித்து தின்று விழுங்கி விட்டன. அன்றைய பேராசை, இன்றைய பேரழிவுக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இன்று மக்கள் வங்கிகளைக் கண்டு பயந்தோடும் நிலைமை உருவாகி விட்டது.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

________________________________________________________________
முன்னைய பதிவுகள் :
காசு ஒரு பிசாசு! (அனைவருக்குமான பொருளியல்)
வீடு வரை கனவு, காடு வரை கடன்
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
__________________________________________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.